Saturday, May 24, 2008

விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கம் (தொடர்ச்சி)




விழுப்புரத்தில் 11-05-2008 ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் நிகழ்வாக நடைபெற்ற ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு பற்றிய செய்திகள் (தொடர்ச்சி)

10-5-2008 காரி(சனி)க் கிழமை அன்றே பயிலரங்கம் பற்றிய விளம்பரப் பதாகைகள் கட்டப்பட்டன. கல்லூரியின் கணிப்பொறிப் பயிற்றறைப் பகுதிக் கருகிலுள்ள இடங்களெல்லாம் தூய்மை செய்யப்பட்டன. திரு.உலகதுரை குழுவினரால் கல்லூரி வாயிலில் இருந்து பயிற்றறை வரையிலும் அழகாகப் பல்வேறு வண்ணங்களில் கொடிகளை ஏந்திய மெல்லிய இருப்புக்குழாய்க் கம்பங்கள் எழிலுற நடப்பட்டன.

10-5-2008 மாலை புதுவை வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் அவர்களைத் தொடர்பு கொண்டபோது மறுநாள் காலை எட்டரை மணிக்கு விழுப்புரம் கல்லூரிக்குத் தம் குழுவினருடன் வந்துவிடுவதாகக் கூறினார்.
11-5-2008 ஞாயிறு காலை 7 மணிக்குக் கைப்பேசியில் அழைத்த சென்னைத்தோழர் பாலபாரதியின் எழுச்சிக்குரல் ‘தலைவா, கிளம்பி வந்துகொண் டிருக்கிறோம்! சரியான நேரத்திற்கு வந்துவிடுவோம்!’ எனக்கூறி ஊக்கியது.
விடியற் காலையிலேயே கல்லூரி வளாகத்திற்கு வந்து இரவிக்கார்த்தியும் பேரா.குமரனும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஒருங்கிணைப்புக் குழுத் தோழர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஒதுக்கிய பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
புதுவைப் பயிற்றுநர்குழு எட்டரைமணிக்கு வந்தது. உடனடியாக அக்குழுவினர் கணிப்பொறிகளை அணியப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 9 மணிக்கெல்லாம் பயிலுநர் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்தனர். அவர்களிடம் பதிவுத் தாள்களில் அவரவர்களைப் பற்றிய விளத்தங்கள் எழுதி வாங்கப்பட்டன. ஒலிபெருக்கி, காட்சித்திரைகள் அணியப்படுத்தியபின், காலை 10 மணிக்கெல்லாம் பயிற்சி தொடங்கியது.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் பயிலரங்க நிகழ்ச்சி பற்றி விளக்கியுரைத்தார். பின்னர்ப், பேராசிரியர் மு.இளங்கோவன் அறிமுகவுரை ஆற்றினார்.
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. க.பொன்முடி வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு வரச் சிறிது நேரமாகும் என்று செய்தி தெரிந்ததால், பயிலரங்கு தொடங்கியது.

பேரா. இளங்கோவன், தமிழில் தட்டச்சு செய்வது பற்றியும், தமிழ் 99 விசைப்பலகை பற்றியும், ஒருங்குகுறி (Unicode) பற்றியும் கூறி நிறை குறைகளையும் கூறினார். இடையே, இரா.சுகுமாரன் சில ஐயங்களுக்கு விடையளித்தார்.

அடுத்து, சென்னைப் பதிவர்கள் மா.சிவக்குமார், பாலபாரதி ஆகியோர் மின்னஞ்சல் கணக்கு தொடங்குவது குறித்து வகுப்பு நடத்தினர். அவற்றைத் தொடர்ந்து பயிலுநர் அனைவரும் மின்னஞ்சல் கணக்கு தொடங்கும் பணியில் ஈடுபட்டனர்.
பயிலரங்க நிகழ்வுகளை இர.கதிரவன் தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருந்தார். தோழர் கோ.சுகுமாரன் நிகழ்வுச் செய்திகளைகளைப் படங்களோடு உடனுக்குடன் பதிவுசெய்து தமிழ்மணத்தின்வழி உலகெங்கிலுமுள்ளோர் பார்க்கத் தந்துகொண்டிருந்தார்.

மா.சிவக்குமார், பாலபாரதி ஆகியோர் வலைப்பதிவு பற்றிய அறிமுகம் செய்தனர். வலைப்பதிவு தொடங்குவது, வலைப்பதிவில் எழுதுவது, பின்னூட்டம், மறுமொழி பற்றி நன்கு விளக்கினர். பயிலுநர் அனைவரும் வலைப்பதிவு தொடங்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பயிலரங்கில் உரையாற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் அரங்கிற்கு வந்தார். அவருடன் விழுப்புரம் நகரமன்றத் தலைவர் திரு.சனகராசு, கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களும் ஆர்வலரும் வந்தனர்.

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் தமிழநம்பி, ரவிகார்த்திகேயன் ஆகியோர் முறையே அறிமுக உரையும், வரவேற்புரையும் கூறினர். விழுப்புரம் அரசுக் கல்லூரி முதல்வர் திரு பாவா மொய்தீன், நகரமன்றத் தலைவர் திரு.சனகராசு முதலானோர் பயிலரங்கை வரவேற்று உரையற்றிய பின், இறுதியில் அமைச்சர் திரு. க.பொன்முடி உரையாற்றினார்.
அப்போது அவர் ,
“கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்த வேண்டுமென தலைவர் கலைஞர் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் ஒரு மாநாடு நடத்தினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய பன்னாட்டு அறிஞர்களை அழைத்துச் சென்னையிலேயே மாநாடு நடத்தினார்.
கணிப்பொறியில் தமிழ்ப் பயன்பாடு வந்திருந்தாலும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை. நாம் ஒருவரை ஒருவர் சந்தித்தால் தமிழில் பேசாதது தான் காரணம். ஆங்கிலத்தில் பேசும் அடிமைத்தனம் நமக்கு இருக்கிறது. அதை நாகரிகம் எனத் தவறாகக் கருதிக் கொண்டு இருக்கின்றோம்.
கணினியில் தமிழ்ப் பயன்பாடு, குறைந்தது தமிழர்களை இணைப்பதற்கேனும் பயன்படும். இந்த முயற்சி தொடர வேண்டும். கல்லூரி மாணவர்கள் இடையில் இந்த முயற்சியைக் கொண்டு சென்றால் தமிழ் வளரும். குறிப்பாகக் கல்லூரிப் பேராசிரியர்கள் இதற்கு உரிய முயற்சி எடுக்க வேண்டும்.
விழுப்புரம் அரசுக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் முதுநிலை - தெரிசெய்தி தொழில்நுட்பப் (Information technology) பாடப்பிரிவுத் தொடங்க உள்ளோம்। அதில் இந்த முயற்சியைத் தொடர வேண்டும்.”
– என்று கருத்துக்களைக் கூறினார்.

அமைச்சர் திரு.க.பொன்முடியின் உரை முடிந்ததும், அவருக்குப் புதியதாக. "கலைஞர்" என்ற பெயரில் ஒரு வலைப்பதிவு தொடங்கி வைத்து விளக்கமளித்த போது அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அமைச்சர் உரையாற்றிச் சென்றபின், பயிற்சி தொடர்ந்தது.

வலைப்பதிவில் புகைப்படம், ஒலிகள், காண்பொலிப் படம் இணப்பது குறித்து ‘வினையூக்கி’ செல்வா, அருணபாரதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிலுநர் பலரும் ஆர்வத்துடன் தங்களுக் கெழுந்த ஐயங்களைக் கேட்டு அவற்றிற்கான விளக்கம் பெற்றனர்.
அடுத்தபடியாகப், பதிவுகளைத் திரட்டியில் இணைப்பது குறித்து விக்கி பயிற்சி அளித்தார். அவருடன் இரா.சுகுமாரன் கருத்து விளக்கம் அளித்தார்
குறிப்பாகத், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவு, திரட்டி, தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் வலைப்பதிவுகளை இணைப்பது பற்றி விரிவாக பயிற்சி அளித்தனர். இடையே, பாலபாரதி திரட்டிகளின் கருவிப் பட்டைகளை இணைப்பது பற்றியும் பயிற்சி அளித்தார்.
பகல்உணவாக மரக்கறிப்புலவு, பருப்புக்குழம்புச் சோறு, தயிர்ச்சோறு, வடை முதலியன எளிய முறையில் அளிக்கப்பட்டன.

பகல்உணவிற்குப் பின், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "தமிழ் மென்பொருள்" குறித்து, க.அருணபாரதி, இரா.சுகுமாரன் ஆகியோர் விளக்கிப் பயிற்சி அளித்தனர். இந்த மென்பொருள்களை மென்பொருள் பொறிஞர் க.அருணபாரதி உருவாக்கினார் என்ற செய்தி குறிப்பிடத்தக்கதாகும்.
பயிலரங்கில்,'இணைய உலாவிகள்' பற்றி பாலபாரதி விளக்கம் அளித்தார். குறிப்பாக நெருப்பு நரி (fire fox) பற்றி விரிவாகக் கூறிப் பயிற்சி அளித்தார். அதில் உள்ள பாதுகாப்புகள், வசதிகள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும், பல இணைய உலாவிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினார்.
தமிழில் இயங்குதளங்கள் பற்றிய விளக்கமும் பயிற்சியும் அடுத்து இடம் பெற்றது. இரா.சுகுமாரனும் மா.சிவக்குமாரும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
கடலூர் சீனுவாசன் "கூகுள் ரீடர்" பற்றியும், அதன் பயன் பற்றியும் விரிவாக பயிற்சி அளித்தார். ஒருவர் ஐயமெழுப்பிய போது, "கூகுள்" தேடல் ஆங்கிலத்திலும், தமிழிலும் தட்டச்சு செய்து தேடலாம் என்று கூறி இரா.சுகுமாரன் விளக்கினார். மேலும், "கூகுளி"ன் பல்வேறு பயன்பாடுகள் பற்றியும் விளக்கம் அளித்தனர்.
கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றிக் –குறிப்பாகத் தமிழில் எழுதுதல், தமிழ் மின்னஞ்சல், தமிழில் அரட்டை பற்றியும் – க.அருணபாரதி விளக்கினார்.
சென்னையிலிருந்து வந்த பயிற்றுநர்கள், சிவக்குமார், பாலபாரதி, செல்வா, விக்கி வெங்கடேசு புதுவைத் தோழர்களாகிய இரண்டு சுகுமாரன்கள், பேரா।மு. இளங்கோவன், க.அருணபாரதி கடலூர் சீனுவாசன் ஆகியோருக்கு நினைவுப் பரிசாக நல்ல புத்தகங்கள் அளிக்கப்பட்டன.

நிறைவு விழாவில், கடலூர் பி।எசு.என்.எல். துணைப் பொதுமேலாளர் கே.இரவீந்தரன், விழுப்புரம் கோட்டப் பொறியாளர் கி.இராதாகிருஷ்ணன், விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரிப் பேராசிரியர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிலரங்கின் தேவை பற்றிக் கருத்துரை வழங்கினர்.
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன் ஆகியோரும் பயிலரங்கின் பயன் சிற்றூர் மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பதே தம் நோக்கமென்றும் எந்த ஊருக்கும் தாம் வந்து பயிற்சி அளிக்க அணியமாக இருப்பதாகவும் கருத்துரை வழங்கினர்.
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் இரவிகார்த்திகேயன், எழில்.இளங்கோ முதலானோர் பயிலரங்கின் தேவையை உணர்ந்தே முயற்சி மேற்கொண்டு விழுப்புரத்தில் நடத்தியதாகவும் கூறினர்.
பி.சு.என்.எல். துணைப் பொதுமேலாளர் கே.இரவீந்திரன் அவர்கள் பயிற்சி பெற்றோர்க்குச் சான்றிதழ் வழங்கினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் பயிற்சி பெற்றோர்க்கு மென்பொருள், எழுத்துருக்கள் அடங்கிய இரண்டு குறுவட்டுகள் (C।Ds) இலவயமாக அளிக்கப்பட்டன.
இறுதியில், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழநம்பி நன்றியுரைத்தார். பயிற்சி அளித்தோர், கல்லூரி முதல்வர், பி.எசு.என்.எல். அதிகாரிகள், ஒருங்கிணைப்பாளர்கள் இரவிக்கார்த்திகேயன், பேரா.பு.குமரன், எழில். இளங்கோ, பிரபா.தண்டபாணி, தயா.இளந்திரையன், இரா.ச.சொக்கநாதன், சீ.விக்கிரமன், குபேரன், உலகதுரை, குமார், பச்சையப்பன், சோதிநரசிம்மன், பாபு, அழகுவேல், பன்னீர்செல்வம், செயப்பிரகாசு, நாகராசன் முதலானோர்க்கும், மற்றும் உதவிசெய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
பயிலரங்கு இனிது முடிவுற்றது.

1 comment:

தமிழநம்பி said...

புதுவை வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. இரா.சுகுமாரன்:

உங்கள் பதிவுக்கு நன்றி எல்லா செய்திகளையும் குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களில் குறிப்பாக நீங்கள் திரு ரவிகார்த்திக், எழில் இளங்கோ பேரா.பு.குமரன், அகியோருக்கும்,
பிரபா.தண்டபாணி, தயா.இளந்திரையன், இரா.ச.சொக்கநாதன், சீ.விக்கிரமன், குபேரன், உலகதுரை, குமார், பச்சையப்பன், சோதிநரசிம்மன், பாபு, அழகுவேல், பன்னீர்செல்வம், நாகராசன் ஆகியோருக்கும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பாக பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

செய்தி:தமிழநம்பி